ரசிக்க மட்டும் தெரிந்த என்னை
கவிதை எழுத வைத்தவனே
அழகிய கவிதையெனத் தோன்றுகிறாய்
ஒவ்வொரு வரியாக எழுதுகிறேன்
முடிய மறுக்கிறது கவிதை
முதல் பார்வையில் உணரவில்லை
நம் ஜென்ம பந்தத்தை
என் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது
என்னைக் கடந்து செல்கையில்
ஏதோ கூறிவிட்டுச் சென்றாயே
நினைவிருக்கிறதா
திகைத்து உன்னை நோக்கிய போது
சிறு புன்னகையுடன் நகர்ந்து சென்றாயே
அந்த முதல் சந்திப்பு
என் மனதில் இன்னும் பசுமையாய்
அலைபாயும் என் உணர்வுகளுக்கு உரியவனே
நீ அறியாய்
உன் பெயரைத் தவிர
மற்றைய எழுத்துக்கள் என் பேனாவால்
பெரும்பாலும் தவறாகவே எழுதப்படுகின்றன
உன்னை மட்டும் சந்தித்திராவிட்டல்
காதலின் சுவை என்னவென்று அறியாமலே
என் ஆயுள் முடிந்திருக்கும்
விழுதுகள் போல உறவுகள்
ஓராயிரம் வந்துமென்ன
என் வேரென நீயிருந்தாய்
அதனால் நான் சாய்ந்து விடாதிருந்தேன்
நினைக்க நினைத்தால்
பக்கமாய் இருப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
முழுமையாக்கி மகிழ்கிறது என் இதயம்.