அன்று தொட்டு இன்று வரை கோயில்கள் என்றால் புனிதத்தன்மை வாய்ந்த ஒரு இடமாகத்தான் எல்லோராலும் போற்றப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததே.ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமானதா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கிடமாகத்தான் இருக்கின்றது.எல்லாக் கோயில்களையும் அப்படிக் கூறவில்லை.ஒரு சில கோயில்களில் அத்தகைய நிலை காணப்படுவது மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என்பது உண்மை.இங்கு நான் கோயில்களை சுட்டிக் காட்ட விரும்பவில்லை.தேவையான சந்தர்ப்பத்தில் அதைச் சுட்டிக் காட்டக்கூட தயங்க மாட்டேன்.ஆனால் இப்போது அது தேவையில்லை என நினைக்கிறேன்.இங்கு நான் கூறப்போகின்ற விடயங்கள் நீண்ட காலமாக என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சில நிகழ்வுகள்.
முதலாவது,கோயிலுக்கு சென்று வணக்கத்தகுந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு பதில் தர வேண்டுமென்றால்.கோயில் என்பது எல்லோருக்கும் பொதுவான இடம் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் சென்று வழிபடலாம்.(தீட்டு உள்ளவர்களை தவிர) என்று கூறுவீர்கள்.ஆனால் நான் பார்த்த ஒரு கோயிலில் குறிப்பிட்ட சிலர் எப்போது பார்த்தாலும் கோயிலுக்கு உள்ளே வந்து வழிபட மாட்டாங்க வெளியிலேயே நிற்பாங்க.அப்போ ஊர் பெரியவங்க கிட்ட நான் கேட்டேன் ஏன் அவங்க அங்கேயே நிற்கிறாங்க என்று.குறைஞ்ச ஜாதிக்காரர் கோயிலுக்குள்ள வரக்கூடாது என்பது அவங்க ஊர் கட்டுப்பாடாம்.அப்போ நான் சின்னப் பொண்ணு என்றதால அப்படிக் கூறி சமாளிச்சிட்டாங்க.நானும் விட்டுட்டன்.
அதே கேள்வியை நான் இப்போ கேட்டதுக்கு அதே பதிலைத்தான் சொன்னாங்க.நானும் கேள்வி கேட்டு அவங்ககூட வாதாடினேன்.அவர்களும் சமாளிப்பதற்கு ஏதேதோ காரணங்கள் சொன்னாங்க.இறுதியில் சொன்னாங்க அது அந்தக்கால பெரியவங்க கட்டுப்பாடு போட்டாங்க நாம ஒன்றும் செய்ய முடியல என்று.நான் கேட்டேன் இப்போ நீங்கதானே பெரியவங்க நீங்க இந்த காலத்துக்கு ஏற்ப கட்டுப்பாட்டை மாற்றலாம்தானே என்று.இப்போ அவங்க வரவேணாம் என்று நாங்க சொல்லலைதானே வேணுமென்றால் அவங்க உள்ளே வரலாம்தானே என்றாங்க.அதை என்கிட்ட சொல்லி என்ன ஆவது?அவங்ககிட்ட சொன்னால் அவங்க உள்ளே வருவாங்கதானே.இவங்க மனசில தோன்றத அவங்க என்ன மையா போட்டு பார்க்கிறது?
கடவுள் வந்து சொல்லிச்சா மேல் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் கோயிலுக்குள்ள வந்து என்னை கும்பிடனும் மற்றவங்க எல்லோரும் வெளியில நின்றுதான் கும்பிடனும் என்று.நீங்களா ஒரு சட்டம் போடுவீங்க அதுக்கு ஒரு சமாளிப்புக் கதை வேற.தங்களது குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டும் அவர்களை பிரித்து வைக்கப்பட்ட கீழ் ஜாதிக்காரர்களது உதவி வேணும்.அப்பிடி என்றால் அந்த தேவைகளுக்கும் அவர்களை நாடாமல் தாங்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதானே?அது அவங்க கௌரவப் பிரச்சனை.ஏன்னா அவங்கதான் உயர்ந்த ஜாதிக்காரர்களாச்சே.எப்படி அவங்க அதெல்லாம் பண்ணுவாங்க?
இப்படிப்பட்ட சமூகம் ஒன்றில் தானாக உணர்ந்து திருந்திக் கொள்ளணும்.அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.இல்லையேல் யாராவது இதனை அவர்களுக்கு உணர வைக்கணும்.மேல் ஜாதிக்காரர்களுக்கு ஒரு கடவுள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு வேறு கடவுளா?மனசிலே இவ்வளவு அழுக்குகளை வைத்துக்கொண்டு தாங்கள் மேல் ஜாதின்னு சொல்லிக்கொண்டு திரிகிறவர்களே கோயிலுக்கு உள்ளே போகலாம் என்றால் அவங்களால் கீழ் ஜாதின்னு ஒதுக்கி வைத்திருப்பவர்கள் உள்ளே சென்று வழிபடுவதை ஏன் தடுக்கணும்?இதை நாம சொல்லப்போனா திமிர்ல பேசுறா,பெரியவங்கள எதிர்த்து பேசுறா என்றெல்லாம் பெயர்.
அப்போ பூனைக்கு மணி கட்டப் போறது யார்...........?
கவனத்திற்கு:-
யாரையும் கேவலப்படுத்துவதோ,யார் மனதையும் புண்படுத்துவதோ என் எண்ணம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடரும்....