கோயிலில் பல அறிந்த முகங்கள்.ஏனோ பேச மனமின்றி அங்கும் சிறு புன்னகையுடன் தனிமையையே நாடினேன்.என் மனம் புரிந்தவர்களாய் விலகினார்கள்.கூட்டத்தை தவிர்த்து ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.மனதை வேறு பாதையில் திருப்புவதற்காக வேடிக்கையில் கவனம் செலுத்தினேன்.அங்கு கண்ட ஓர் காட்சி கண்ணில் நீர் துளிர்க்க வைத்து விட்டது.
ஒரு அழகான சிறு பெண் குழந்தை.நான் நினைக்கிறேன் அதற்கு இரண்டு வயது இருக்கலாம்.ஏற்கெனவே பெண் குழந்தையென்றால் ரொம்பவே இஷ்ரம்.பார்த்ததுமே அக் குழந்தையை ரொம்பவே பிடித்திருந்தது.அப்போது முதல் அக்குழந்தையை சுற்றியே என் கண்கள் வட்டமிட்டுக் கொண்டன.அதன் குறும்புகளை ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்.
அப்போது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அக்குழந்தை முன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.குழந்தையும் மிகவும் சந்தோசமாய் அவன் விளையாட்டினை பார்த்து கைகொட்டி ரசித்திருந்தது.நேரமானதால் அச்சிறுவனை அவன் தாயார் அழைக்கவே ஓடினான்.அடுத்த நொடி அக்குழந்தையின் சின்னஞ்சிறு அழகிய பூ முகம் சிவந்துவிட்டது.அச் சிறுவன் ஓடிய திசையை நோக்கியே அண்ணா அண்ணா என அழைத்தபடி அழுதது.சிறுவனுக்கு தன்னைத் தான் பாசமாய் அக்குழந்தை அப்படி அழைக்கிறது என்பது புரியவில்லை.ஒருவேளை அவன் தங்கை இருந்திருந்தால் அக்குழந்தை நிலையினை புரிந்திருப்பானோ?அச் சிறுவன் சென்று மறைந்துவிட்டான்.சிறிது நேரம் அவன் போன திசையை பார்த்து அழுதபடியே நின்றிருந்தது.
ஒரு நிமிடம் என் இதயம் துடிப்பது நின்றுவிட்ட உணர்வு. அக்குழந்தைக்காகவோ, இல்லை எதற்காகவோ தெரியவில்லை என்னை அறியாமேலே என் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.யாரும் அறியமுதல் அதனை அழித்துக் கொண்டேன்.கண்டவுடன் யார்மீதும் உறவு சொல்லி பாசம் வையாதே.அதன்பின் உன் கண்ணில் நீரையே காணமாட்டாய். ஓடிப் போய் அக்குழந்தையிடம் இவ்வாறு சொன்னாலென்ன என தோன்றியது.இருபது வயதே புரியாத குழந்தை வயசாய் தடுமாறும் நிலையில் இரண்டு வயது குழந்தையிடம் சொல்லி என்னாவது?
நிம்மதியைத் தேடி கோயில் சென்றேன்.இருந்த கொஞ்ச நிம்மதியையும் இழந்துவிட்டுத் திரும்பி வந்தேன்.