புறத்திணைகள் ஏனோ தடுக்கிறது!
விடியலில் காண்பேன் - இல்லை
அந்தியில் காண்பேன்
வீதியில் காண்பேன் - இல்லை
கோவிலில் காண்பேன்
அருகினில் காண்பேன் - இல்லை
தொலைவினில் காண்பேன்
புன்முறுவலுடன் காண்பேன் - இல்லை
வீராப்பாய் காண்பேன்.
எத்தனை எத்தனை கற்பனைகள்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
பொழுதுகள்தான் விடிகின்றன
பெளர்ணமி நிலவில்
உன் செல்லக் குறும்புகளை ரசித்தபடி
உன்னருகில் இவள் கண்ட இன்பமும்
நீ உண்ட உணவில் ஓர் பாதியை
ஊட்டிவிட்ட உன் பாசமும்
இதுவரை பெற்றிடா இன்பமாய்
இவள் உயிரில் நிறைந்திடவும்,
உன்னோடு சேர்ந்து நடக்கையில்
உறவுகள் கண்கள் விரிய
எமை நோக்கையில்
பெருமிதத்தில் கொஞ்சம்
கர்வம் தலைக்கேறியதும் ஓர்நாள்!
காரணமேதுமின்றி நாம் போடும்
செல்லச் செல்லச் சண்டைகள்
பிரிவின் பின் உயிர்ப்பாய் கூடிடும் வேளை
நாம் காணும் இன்பம்!
மரண ஓலங்களுடன்
சுற்றி ஆயிரம் உறவுகள்
ஏனோ நீ மட்டும்
எங்கோ தொலைவினில்
தீண்டத்தகாதவனாய்???
தினம் தொடரும் கனாக்களின் யுத்தத்தில்
விடிந்தும் விடியாத பொழுதுகளை
வரமாக எண்ணி,
கண்கள் பூத்து நரை தவழும்
அந்த நாளுக்காய் காத்திருக்கிறது
என் வாழ்வு!!!